Sunday, September 4, 2011

மாணவர்களுக்கு லேப்-டாப் விவசாயிகளுக்கு ஆடு-மாடுகள்



15-ந்தேதி ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்


மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

சென்னை, செப்.4-

சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

இலவச திட்டங்கள்

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

அந்த இலவச திட்டங்கள் வருமாறு:-

* அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் (மடிக்கணினி).

* தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி.

* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு கலப்பின கறவை மாடு. விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.

15-ந் தேதி ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

முத்தான இந்த 3 திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் ரூ.2,353 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி இந்த 3 திட்டங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

14-ந் தேதி வரை சட்டபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாளில் மூன்று முத்தான திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன.

லேப்-டாப்

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக லேப்-டாப் வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில் (2011-2012) தகுதியுள்ள மாணவர்களுக்கு 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 6 ஆயிரத்து 800 லேப்-டாப்கள் வாங்குவதற்காக குறுகிய கால டெண்டர் விடப்பட்டு உள்ளது. எச்.பி. உள்பட இரண்டு நிறுவனங்கள் இந்த குறுகிய கால டெண்டரை எடுத்து உள்ளன.

மீதமுள்ள மாணவர்களுக்கு வேறு பல கம்ப்ïட்டர் நிறுவனங்களுடன் டெண்டரை இறுதி செய்து லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக வழங்கப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மிக்சி, கிரைண்டர்

அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களிலுள்ள தாய்மார்கள் படிப்படியாக பயன் அடைவார்கள். இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 18 கம்பெனிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தயாரிக்க டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனங்கள் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. ஒருவாரத்திற்குள் தயாரிப்பு முடிந்து `பேக்கிங்' செய்யப்படும்.

தயார் நிலையில் ஆடுகள், மாடுகள்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 4 வெள்ளாடுகள் அல்லது 4 செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 4 லட்சம் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டன.

பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்குவதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டில் பால் உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் (21 மாவட்டங்கள்) வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு `ஜெர்சி' போன்ற 12 ஆயிரம் கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக பட்ஜெட்டில் ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு உத்தரவுப்படி, கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நடைபெற்ற கால்நடை சந்தைகளில் சுமார் 12 ஆயிரம் கலப்பின கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

பால் பொருட்கள் தயாரிப்பு அதிகரிக்கும்

இந்த திட்டம் தொடங்கப்பட்டதும் மாநிலத்தில் `ஆவின்' நிறுவனத்தின் பால் கொள்முதல் அதிகரிக்கும். தற்போது தினமும் சுமார் 24 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 27 லட்சம் லிட்டராக அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து பால் பொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா போன்றவற்றின் தயாரிப்பும் அதிகரிக்கும். கர்நாடக மாநிலத்தில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Friday, February 25, 2011

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…


!

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.
‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.
இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.
முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.
ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.
இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.
சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.
நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.
கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.
மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.
நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.
 முனைவர் வசந்திதேவி
சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து

Thursday, February 24, 2011

தேர்தல் விபச்சாரம்: மக்களவை தேர்தலிலும்தான்!



"விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா?  அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!" என்று நான் ஒரு பதிவிட்டுருந்தேன். அதில்:

"காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.


அதே போன்றுதான்  திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம்  பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.  தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை."

என்றும்

"எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?  ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால்  அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்."

என்றும் கூறியிருந்தேன். மேலும், 1952 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொத்தம் 13 சட்டமன்ற தேர்தலிகளிலும் எப்படியெல்லாம் மாறிமாறி கூட்டணி அமைத்திருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அதற்கு, திரு. வால்பையன்:

"ஆனா பா.ம.க மட்டும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு கட்சி, ஊராட்சி தேர்தலுக்கு ஒரு கட்சின்னு கூட்டணி மாத்துதே! அதை ஏன் சொல்ல மாட்டிங்கிறீங்க!"

என்று கேட்டிருந்தார்.

இதோ, 1952 முதல் தமிழ்நாட்டில் நடந்த 14 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி விவரங்கள்:

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடந்தது. காங்கிரசு கட்சி மற்றும் இந்திய பொதுவுடைமக் கட்சி ஆகியன முதன்மையான கட்சிகளாக இருந்த அத்தேர்தலில்  வன்னியர் கட்சிகளான ராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களிலும், மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி 3 இடங்களிலும் தனித்து நின்று வென்றன.


தமிழ்நாட்டில் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1957


காங்கிரசு கட்சி அரசியல் இயக்கமாகவும், திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 1962

காங்கிரசு கட்சி, திமுக, பார்வார்டு ப்ளாக், இகஐ, சுதந்திரா கட்சி ஆகியன போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் நான்காவது நாடாளுமன்ற தேர்தல் 1967

திமுக, சுதந்திரா கட்சி, இகஐ(M), முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.  காங்கிரசு மற்றும் இகஐ ஆகியன தனித்தனியாக போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1971

திமுக, காங்கிரசு கட்சி, பார்வார்டு ப்ளாக், இகஐ, முசுலீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி.

காமராசரின் நிறுவனக் காங்கிரசு, ராசாசியின் சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.

இகஐ(M) தனித்து போட்டி.

தமிழ்நாட்டில் ஆறாவது நாடாளுமன்ற தேர்தல் 1977

அ.தி.மு.க., காங்கிரசு, இகஐ கட்சிகள் கூட்டணி.

நிறுவன காங்கிரசு, சனதா கட்சி, தி.மு.க கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் 1980

திமுக, காங்கிரசு, முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க., சனதா கட்சி, காங்கிரசு (அர்சு) கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் எட்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1984

அதிமுக, காங்கிரசு, காந்தி காமராஜ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், இகஐ, இகஐ(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் 1989

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, சனதா தளம், இகஐ, இகஐ(M) கட்சிகள் கூட்டணி

தமிழ்நாட்டில் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் 1996

அதிமுக, காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

திமுக, த.மா.க, இகஐ கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினோராவது நாடாளுமன்ற தேர்தல் 1998

அதிமுக, பாமக, பாசக, மதிமுக, சனதா கட்சி, தமிழக ராசீவ் காங்கிரசு கட்சிகள் கூட்டணி

திமுக, த.மா.க, இகஐ கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாவது நாடாளுமன்ற தேர்தல் 1999

திமுக, பாமக, பாசக, மதிமுக கட்சிகள் கூட்டணி.

அதிமுக, இகஐ, இகஐ(M), காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதிமூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் 2004

திமுக, பாமக, இகஐ, இகஐ(M), காங்கிரசு, ம.தி.மு.க கட்சிகள் கூட்டணி.

அதிமுக, பாசக கட்சிகள் கூட்டணி.

தமிழ்நாட்டில் பதினான்காவது நாடாளுமன்ற தேர்தல் 2009

திமுக, காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி.

அதிமுக, ம.தி.மு.க,  பாமக, இகஐ, இகஐ(M) கட்சிகள் கூட்டணி.

இவ்வாறாக கடந்த கால தேர்தல் வரலாற்றில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அடிக்கடி கூட்டணி மாறி தேர்தலை சந்தித்துள்ளன. (இதையே, நாடாளுமன்ற தேர்தல்  அதனை அடுத்துவந்த சட்டமன்ற தேர்தல் என்ற அளவில் ஒப்பிட்டு பார்த்தால்கூட உடனடி தாவல்கள் பல நடந்துள்ளது தெரியவரும்.)

Wednesday, February 2, 2011

கடைசி வாய்ப்பு




உலக கோப்பையை கைப்பற்ற ஆறாவது முறையாக படை எடுக்கிறார் சச்சின். இம்முறை கடைசி வாய்ப்பு என்பதால், கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட காத்திருக்கிறார். உடல் காயத்தை பொருட்படுத்தாது மன வலிமையுடன் போராடி, இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் சாதனை புத்தகத்தை புரட்டினால், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெயர் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். அந்தளவுக்கு சாதனை மேல் சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்(177 போட்டி, 14, 692 ரன், 51 சதம்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(444 போட்டி, 17, 629 ரன், 46 சதம்) அதிக ரன், அதிக சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, உலக கோப்பை மட்டுமே எட்டாக் கனியாக உள்ளது.
ரன் வேட்டை:
தனது 16வது வயதில் 1989ல் இந்திய அணியில் அறிமுகமானார் சச்சின். 1992ல் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். அடுத்து 1996ல் நடந்த தொடரில் ரன் மழை பொழிந்த இவர், மொத்தம் 531 ரன்கள் எடுத்தார். பின் 1999ல் நடந்த தொடரின் போது இவரது தந்தை மறைந்து விட, லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து சென்றார். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதம்(101 பந்துகளில் 140 ரன்கள்) விளாசி, தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.
தொடர் நாயகன்:
கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடர், சச்சினுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இத்தொடரின் போது இவரது இடது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது. வலியை தாங்கிக் கொண்ட இவர், நாட்டுக்காக தொடர்ந்து விளையாடினார். நமீபியாவுக்கு எதிராக 152 ரன்கள் எடுத்த, இவர் உலக கோப்பை அரங்கில் தனது அதிபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். பைனலில் இவர் 4 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக 673 ரன்கள் எடுத்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 2007ல் ஏமாற்றினார்.
எதிர்பார்ப்பு அதிகம்:
இம்முறை, உலக கோப்பை தொடரின்(பிப்.19ஏப்.2) பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க இருப்பதால், சச்சின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவரது சாதனைகளை விரட்டிக் கொண்டிருக்கும் கேப்டன் பாண்டிங், ஆஸ்திரேலிய அணிக்கு 3 முறை உலக கோப்பை பெற்று தந்துள்ளார். அதிரடி பேட்டிங்கிற்கு புகழ் பெற்ற வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இரண்டு முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். இவர்கள் வரிசையில் சச்சினும் இடம் பெற வேண்டும்.
கடைசி வாய்ப்பு:
தற்போது 37 வயதான சச்சினுக்கு உலக கோப்பை கைப்பற்ற இது தான் கடைசி வாய்ப்பு. ஏனென்றால் அடுத்த முறை 41 வயதை எட்டி விடுவார் என்பதால், பங்கேற்பது கடினம். தவிர, "டுவென்டி20' போட்டிகளின் அசுர வளர்ச்சியால், எதிர்காலத்தில் 50 ஓவர் போட்டிகள் நடக்குமா என்ற அச்சம் வேறு நிலவுகிறது. இம்முறை சச்சினுக்கு ஏற்பட்டுள்ள காயம்(தொடைப் பகுதியில் பிடிப்பு) சற்று கவலை அளிக்கிறது. ஆனாலும், உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நெருக்கடி:
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 200 ரன்கள் எடுத்து மகத்தான சாதனை படைத்த சச்சினுக்கு, இம்முறை உலக கோப்பை போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பது கூடுதல் நெருக்கடியை தரலாம். ஒவ்வொரு போட்டியி<லும் இவர் ரன் மழை பொழிய வேண்டும் என உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஏப்., 2ல், தான் பிறந்த மும்பையில் நடக்கும் பைனலில்( வான்கடே மைதானத்தில்) விளையாடும் அரிய வாய்ப்பை சச்சின் பெறலாம்.
கடந்த 1983ல் இந்திய அணிக்கு கபில்தேவ் முதல் முறையாக உலக கோப்பை பெற்று தந்தார். அதற்கு பின் 2003ல், அணியை பைனல் வரை அழைத்துச் சென்றார் கங்குலி. 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி20' உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. அடுத்து 50 ஓவர் தொடரிலும் உலக கோப்பை கைப்பற்றி, சச்சினின் கனவை நனவாக்க, தோனியின் படை தயாராக உள்ளது.

தொடரும் முதலிடம்
சச்சின் இதுவரை 5 உலக கோப்பை தொடரில்(1992, 96, 99, 2003, 2007) பங்கேற்றுள்ளார். மொத்தம் 36 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், அதிக ரன்(1,796) எடுத்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒவ்வொரு முறையும் இவரது செயல்பாடு:
ஆண்டு    போட்டி    ரன்    அதிகம்    சராசரி    சதம்    அரைசதம்
1992    8    283    84    47.16        3
1996    7    523    137    87.16    2    3
1999    7    253    140    42.16        1  
2003    11    673    152    61.18    1    6
2007    3    64    57    32.00        1
மொத்தம்    36    1796    152    57.93    4    13
சாதனைகள்...
உலக கோப்பை அரங்கில், சச்சின் நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள்:
அதிக ரன்கள்: 1,796 ரன்
அதிக அரைசதம்: 17
அதிக சதம்: 4
ஒரே தொடரில் அதிக அரைசதம்: 7, 2003
ஒரு தொடரில் அதிக ரன்: 673 ரன், 2003
அதிக முறை ஆட்ட நாயகன் விருது: 8