ஜோகன்னஸ்பர்க்,ஜுலை.13
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 10 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி உலக சாம்பியனானது.
கடுமையான போட்டி
உலகம் முழுவதும்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க், சாக்கர் சிட்டி மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்தது.
இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போர்க்குணத்துடன் கடுமையாக மோதினர்.துவக்கத்தில் யூரோ சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார்.இருப்பினும் ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது. முதல் 20 நிமிடங்கள் ஸ்பெயின் வீரர்கள் நெதர்லாந்து வீரர்களை விளையாடவே விடவில்லை. கிடைத்த இடைவெளியில் நெதர்லாந்தின் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
மஞ்சள் கார்டு படலம்
ஒருவழியாக நெதர்லாந்தும் தனது பலத்தை காட்ட ஆரம்பித்து முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.தொடர்ந்து பிற்பாதியிலும் மஞ்சள் அட்டை பெறும் படலம் தொடர்ந்தது.
தொடர் முயற்சி
இந்த முறை நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் 53வது நிமிடத்திலும் 55வது நிமிடத்தில் ஹெட்டிங்காவும் முரட்டு ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தில் சூடு குறையவில்லை. இரு அணி வீரர்ளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 62வதுநிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு கோல் போட நல்ல வாய்ப்பு கிடைத்தது. குயித்திடம் இருந்து வந்த பாசை பெற்ற ராபன் ஸ்பெயினின் இரு தடுப்பாட்டக்காரர்களை கடந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். பந்தை பிடிக்க பாய்ந்த ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாசின் காலில் பட்டு பந்து வெளியேறி விட்டது.
இதனால் ஸ்பெயின் மயிரிழையில் தப்பித்தது.
ஏமாற்றிய வீரர்கள்
இதேபோல் இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். ஆட்டத்தின் 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார்.ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து வீணானது. ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர்கள் அனைவரும் முன்களத்திற்கு சென்றிருந்த சமயத்தில் ராபனுக்கு ஒரு திடீர் பாஸ் கிடைத்தது. பந்தை கடத்தி வந்து கடைசியில் கோட்டை விட்டார் ராபன்.இதனால் மீண்டும் ஸ்பெயின் தப்பி பிழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடம் வரை கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது .
கூடுதல் நேரத்தில் கோல்
இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது. பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.
சரி பெனால்டி ஷூட்அவுட் வரை போகக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 116வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அபாரமான ஒரு கோலைப் போட்டு ஸ்பெயின் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டார்.
பெனால்டியாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேப்ரகஸ் அடித்த பந்து இனியஸ்டாவிடம் வர அதை அழகாக உதைத்தார். அந்தப் பந்து மார்ட்டன் ஸ்டீகெலின்பர்க்கைத் தாண்டி கோலாக மாறியது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது ஸ்பெயின்.ஆட்ட நாயகனாக இனஸ்டா தேர்வு செய்யப்பட்டார் . உலகக் கோப்பையை வென்றுள்ள நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் அணி 8வது நாடாக இணைந்து கொண்டது.
மேலும் வேறு ஒரு கண்டத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இதுவரை எந்த ஐரோப்பிய அணியும் வென்றதில்லை என்ற சாதனையையும் முறியடித்து வேறு ஒரு கண்டத்தில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற புதிய சாதனையையும் ஸ்பெயின் படைத்தது.
உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.
சிறந்த வீரர்கள்
இந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான சிறந்த இளம் வீரருக்கான விருதும் தாமஸ் முல்லருக்கு கிடைத்தது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது (கோல்டன் குளோவ்) ஸ்பெயினை சேர்ந்த இகேர் கேசிலாசுக்கு கிடைத்தது.
தங்கப்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் தங்கப்பந்து விருதுக்கு 10 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில் உருகுவே வீரர் டிகோ பார்லேன் வெற்றி பெற்றார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.
பார்லேன் 5 கோல்கள் அடித்துள்ளார். அவர் அடித்த கோல்கள் எல்லாமே அற்புதமானவை என்று சர்வதேச மீடியாக்கள் அவரது பெயரை தேர்ந்தெடுத்துள்ளது.
தங்கஷு
உலககோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்கஷு வழங்கப்படும். இந்த உலக கோப்பையில் டேவிட் வில்லா (ஸ்பெயின்), ஸ்னைடர் (நெதர்லாந்து), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), டிகோ பார்லேன் (உருகுவே) ஆகிய 4வீரர்கள் 5 கோல்கள் அடித்து இருந்தனர்.இறுதிப்போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் முத்திரை பதிக்க தவறிவிட்டனர்.
4 வீரர்கள் 5 கோல் அடித்து இருந்தாலும் குறைந்த ஷாட்களில் கோல் அடித்து இருந்ததால் ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லருக்கு தங்கஷு வழங்கப்பட்டது.
வெற்றி நாடுகள்
1930: உருகுவே 1934: இத்தாலி 1938: இத்தாலி 1950: உருகுவே 1954: ஜெர்மனி 1958: பிரேசில் 1962: பிரேசில் 1966: இங்கிலாந்து 1970: பிரேசில் 1974: ஜெர்மனி 1978: அர்ஜென்டினா 1982: இத்தாலி 1986: அர்ஜென்டினா 1990: ஜெர்மனி 1994: பிரேசில் 1998: பிரான்ஸ் 2002: பிரேசில் 2006: இத்தாலி 2010: ஸ்பெயின் அணிகள் இதுவரை கோப்பை வென்றுள்ளது.
அதிர்ஷ்டம் இல்லாத நெதர்லாந்து
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 3வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது.
1974ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் 12 என்ற கோல் கணக்கிலும், 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவிடம் 13 என்ற கோல் கணக்கிலும் இறுதிப்போட்டியில் தோற்று இருந்தது. தற்போது ஸ்பெயின் அணியிடம் 01 என்ற கணக்கில் தோற்றுள்ளது.
அதிகபட்சமாக
உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவரை 19 முறை நடைபெற்றுள்ளது. இதில் பிரேசில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இத்தாலி 4 தடவையும், ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா, உருகுவே அணிகள் தலா 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்றன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் தலா ஒரு தடவையும் கோப்பையை வென்றுள்ளன.
பிரியாவிடை கொடுத்தது உலகக் கோப்பைக் கால்பந்து !
30 நாட்களாக நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தது தென்னாப்பிரிக்கா.
இது ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உணர்வுகளை, மதிப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த அமைந்த நல்ல வாய்ப்பு என்பதே ஒவ்வொரு ஆப்பிரிக்கரின் உணர்வாக அமைந்தது.தென்னாப்பிரிக்க போர் விமானங்கள் நிகழ்த்திய சாகசக்காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அதேபோல 9 கிரகங்களையும் லேசர் ஒளிகளால் உருவாக்கிக் காட்டியதும் மெய் சிலிர்க்க வைத்தது.
ஷகீராவின் வாகா வாகா பாடலும், நடனமும் அரங்கத்தையே ஆட்டம் போட வைத்தது.
லேடிஸ்மித் பிளாக் மெம்போஸா, ஸ்டோவன், அபிகெயில் குபேகா உள்ளிட்டோரின் பாடல், நடன நிகழ்ச்சிகளும் கண்ணைக் கவர்ந்தன.
தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக் கருவியான வுவுசேலாவும் கலை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது.
கோலாகலமாக நடந்த தொடக்க விழாவைப் போலவே மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூடிய நிறைவுவிழாவை தென்னாப்பிரிக்கா நடத்திக் காட்டியது. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் உலகக் கோப்பைக் கால்பந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர் தென்னாப்பிரிக்க மக்கள்.அனைத்து இன மக்களையும் இணைக்கும் ஒரே சக்தி விளையாட்டு என்பதை தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நிரூபித்துள்ளது.
நிறைவு விழாவில் மடிபா
மடிபா என்று செல்லமாக ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் நெல்சன் மண்டலே தனது மனைவி கிரேக்கா சகிதம் வந்து ஆட்டத்தை கண்டுகளித்தார்.அவர் அரங்குக்குள் நுழைந்து முதல் இறுதி நிமிடம்வரை ஆர்ப்பரிப்புடன் கூடியதாக நிறைவு விழா அமைந்தது.
மண்டலோவின் வருகையைப் பார்த்ததும் பல தென்னாப்பிரிக்க ரசிகர்கள் ஆனந்தத்துடன் கண்ணீர் வடித்தனர். ஏதோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா இன்று உலக அரங்கில் உயரிய நிலையில் அமர இந்த மனிதர்தானே காரணம் என்பது அந்த மக்களின் கண்ணீருக்கான அர்த்தம்.
ஸ்பெயினில் உற்சாகம்
ஸ்பெயின் அணி கோப்பையை வென்றதும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் ஆடிப் பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். விவா எஸ்பானா என்று கோஷமிட்டு ஆடிப் பாடினர்.
மாட்ரிடின் மையப் பகுதி மக்கள் வெள்ளத்தால் கடல் போல காணப்பட்டது.
நெதர்லாந்தில் சோகம்
நெதர்லாந்து தோல்வியைத் தழுவியதால் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் போட்டியை கண்டுகொண்டிருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும் மயான அமைதியில் மூழ்கினர். பலர் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது.
வென்றது ஆக்டோபஸ் தோல்வியில் கிளி !
அடுத்தடுத்து அட்டகாசமான கணிப்புகளைக் கூறி அது உண்மையிலும் நடந்து பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால், கணித்தபடியே இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வென்று விட்டது.
அதேசமயம், நெதர்லாந்து வெல்லும் என கூறியிருந்த சிங்கப்பூர் கிளி மணியின கணிப்பு பொய்த்துப் போய் விட்டது.