Tuesday, July 27, 2010

இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை விற்ற இந்திய கால்பந்து நிர்வாகிகள்!

புதுடெல்லி, ஜூலை 27
இந்திய கால்பந்து சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு வெளிநாட்டவருக்கு விற்றதாக இந்திய கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோகன் பகான் அணியின் செயலாளர் அஞ்சன் மித்ரா கூறியதாவது:
தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்காக 17,18,19,20 நம்பர் டிக்கெட்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த டிக்கெட்களின் விலை $400. நான் 18வது எண் இருக்கையில் இருந்தேன். 20வது எண் இருக்கையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் அங்குர் தத்தா இருந்தார்.
மற்ற இரு இருக்கைகளில் இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர். நான் அவர்களுடைய டிக்கெட்களை வாங்கிப் பார்த்தேன். அது எங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்கள்தான். எங்களுக்கு இது வியப்பாக இருந்தது.ஆனால் கொஞ்சம் தாமதமாக உண்மை புரிந்தது.
தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இந்த பிரச்னையை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை. ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கும் "பிபா'வுக்கும் கடிதம் வாயிலாக புகார் தெரிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இரண்டு டிக்கெட்களும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மற்றொரு துணைத் தலைவர் சுப்ரதா தத்தா, பொருளாளர் ஹர்தேவ் ஜடேஜாவுக்கும் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment